எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை - மாணவ, மாணவிகள் 98.53 சதவீதம் தேர்ச்சி


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை - மாணவ, மாணவிகள் 98.53 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 29 April 2019 11:22 PM GMT (Updated: 29 April 2019 11:26 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. மாணவ-மாணவிகள் 98.53 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர்,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில் 21 அரசு உதவி பெறும் பள்ளிகள், 2 ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், 13 நகராட்சி பள்ளிகள், 138 அரசு பள்ளிகள், 151 மெட்ரிக் பள்ளிகள், 21 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 346 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 409 மாணவர்கள், 14 ஆயிரத்து 744 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 153 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள்.

இவர்களில் 14 ஆயிரத்து 113 மாணவர்கள், 14 ஆயிரத்து 610 மாணவிகள் என 28 ஆயிரத்து 723 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 97.95 சதவீதமும், மாணவிகள் 99.09 சதவீதமும் என மொத்தம் 98.53 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. முந்தைய ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.18 ஆக இருந்தது. ஏற்கனவே பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்திலும் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்திருந்தது. ஒரே ஆண்டில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை எட்டிப்பிடித்ததற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, கல்வித்துறை அதிகாரிகளை பாராட்டினார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட, முதன்மை கல்வி அதிகாரி சாந்தி பெற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்ச்சி சதவீதம் உயர்வு என்பது கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேறி வந்து தற்போது முதலிடத்தை பெற்றுள்ளோம். திருப்பூர் மாவட்டம் கடந்த 2015-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 12-வது இடத்தையும், 2016-ம் ஆண்டு 14-வது இடத்தையும், 2017, 2018-ம் ஆண்டுகளில் 7-வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்த முறை அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதே மாநில அளவில் முதலிடத்தை பெறுவதற்கு உதவி செய்துள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆதிதிராவிடர் பள்ளிகளில் படித்த 61 மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 138 அரசு பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்து 610 மாணவ-மாணவிகளில் 10 ஆயிரத்து 349 பேர் தேர்ச்சி பெற்று 97.54 சதவீதத்தை எட்டியுள்ளனர். கடந்த ஆண்டு 95.71 சதவீதமாக இருந்தது. 13 நகராட்சி பள்ளிகளில் 2 ஆயிரத்து 632 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி 2 ஆயிரத்து 572 பேர் தேர்ச்சி பெற்று 97.72 சதவீதம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 93 சதவீதமாக இருந்தது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீத உயர்வு காரணமாகவே முதலிடம் நமக்கு கிடைத்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலை, மாலை நேர சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை நடத்தியும், தேர்ச்சியில் பின்தங்கிய மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வகுப்பு நடத்தியும், அரசு பள்ளிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டும் இந்த தேர்ச்சி சதவீதத்தை நாம் பெற்றுள்ளோம். கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என புகார் வந்தால் அதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சாதனை தொடர முயற்சி

தேர்வு முடிவு குறித்து முதன்மை கல்வி அதிகாரி சாந்தி கூறும்போது, எங்களின் தொடர் முயற்சியால் பிளஸ்-2 மற்றும் அதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் முதலிடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்று இருப்பது மகிழ்ச்சியை எங்களுக்கு கொடுத்துள்ளது. வரும் ஆண்டிலும் இந்த சாதனை தொடர முயற்சி மேற்கொள்ளப்படும். ஜூன் மாதம் பள்ளி தொடங்கியதும், பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தி சிறப்பு வகுப்புகள் மூலம் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மிகப்பெரிய சாதனை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் ஒரே ஆண்டில் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது மிகப்பெரிய சாதனையாகும். இதற்காக மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பாடம் வாரியாக 100-க்கு 100 பெற்றவர்கள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் பாடம் வாரியாக கணிதத்தில் 40 பேரும், அறிவியலில் 103 பேரும், சமூக அறிவியலில் 259 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


Next Story