சூலூர் அருகே, தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி


சூலூர் அருகே, தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி
x
தினத்தந்தி 29 April 2019 10:15 PM GMT (Updated: 29 April 2019 11:47 PM GMT)

சூலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¼ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சூலூர்,

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்படி சூலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா மற்றும் பரிசு பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சுரேஷ்குமார் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் சூலூரை அடுத்த பீடம்பள்ளி சாலையில் பகவதி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் அவரிடம் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அபிஜித் (வயது 25) என்பதும், இவர் பீடம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தும் தெரியவந்தது. இந்த பணத்தை அபிஜித் தனியார் நிறுவனத்தில் இருந்து வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை சூலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story