அடகு வைத்த நகைகளுடன் ஊழியர் மாயம்? தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு


அடகு வைத்த நகைகளுடன் ஊழியர் மாயம்? தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2019 4:30 AM IST (Updated: 3 May 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

அடகு வைத்த நகைகளுடன் ஊழியர் மாயமானதாக பரவிய தகவலால் நேற்று புதுக்கோட்டை தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி ராணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் புதுக்கோட்டை கீழ 5-ம் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் இவர் சொந்தமாக கார் வைத்து உள்ளார்.

இந்நிலையில் மாரிமுத்து கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து தனது காரில் சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனக்கூறி மாரிமுத்துவின் மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவிற்கு சொந்தமான கார் வல்லத்திராக்கோட்டை பகுதியில் உள்ள தைலமர காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த காரில் கவரிங் வளையல்கள் மற்றும் ஒரு ஹார்ட் டிஸ்க் கிடந்தன. இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாரிமுத்து திடீரென மாயமானதால், அவர் வங்கியில் இருந்து நகைகளை எடுத்து சென்று இருக்கலாம் என வங்கி அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். இந்நிலையில், உயர் அதிகாரிகள் வங்கியில் உள்ள நகைகள் சரியாக உள்ளதாக என கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் காணாமல் போன மாரிமுத்துவை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையில், நகைகளை மாரிமுத்து எடுத்து சென்றதாக பரவிய தகவலால் வங்கியில் நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நேற்று காலை முதல் நகை அடகு வைத்த அட்டையுடன் வங்கியில் குவிய தொடங்கினர். இதனால் நேற்று காலை முதல் வங்கி உள்ள பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் வங்கி அதிகாரிகளிடம், நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கேட்டபோது, ஒரு சிலருக்கு நகைகள் உள்ளது என்று கூறுவதாகவும், மேலும் பலரின் நகைகள் காணவில்லை என்றும், இருப்பினும் நகைகளுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்று கட்டாயமாக நகைகளை தருகிறோம் அல்லது நகைக்குரிய பணத்தை தருகிறோம் என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்புவதாக வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். மேலும் மாரிமுத்து சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகளை எடுத்து சென்றிருக்கலாம் என்று வங்கி உயர் அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

இருப்பினும் இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் இதுவரை போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு புகாரும் கொடுக்கவில்லை. வங்கி நிர்வாகத்தின் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து புகார் அளிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
1 More update

Next Story