நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்வது உறுதி - எடியூரப்பா பேட்டி


நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்வது உறுதி - எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 6 May 2019 11:22 PM GMT (Updated: 6 May 2019 11:22 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்வது உறுதி என்று கூறிய எடியூரப்பா, கூட்டணி கட்சிக்குள் தகராறு நடந்தால் நாங்கள் சமாதானம் செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள குந்துகோல், சிஞ்சோலி ஆகிய தொகுதிகளில் வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று சிஞ்சோலியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசியல் செய்வதற்கு தான் நாங்கள் இருக்கிறோம். கூட்டணி கட்சிக்குள் தகராறு நடந்தால், நாங்கள் போய் சமாதானம் செய்ய முடியுமா?. நான் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையில் இந்த ஆட்சி முடியும் வரை அமர தயாராக இருக்கிறேன்.

கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு, ஆட்சி தானாகவே கவிழ்ந்தால் நாங்கள் அரசு அமைக்க முயற்சி செய்வோம். குந்துகோல், சிஞ்சோலி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகி உள்பட 22 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி ஆட்சி கவிழும். இது உறுதி. போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். அவர் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறார்.

லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் குறித்து சோனியா காந்திக்கு எழுதியதாக வெளியான கடித விஷயத்தில் உண்மையை கண்டறிய வேண்டும். அதை விடுத்து அப்பாவிகளை இந்த அரசு கைது செய்கிறது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story