ஒரத்தநாடு பகுதியில் சாலையில் காய்ந்து சேதமடையும் கரும்புகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை


ஒரத்தநாடு பகுதியில் சாலையில் காய்ந்து சேதமடையும் கரும்புகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 May 2019 10:45 PM GMT (Updated: 13 May 2019 8:52 PM GMT)

ஒரத்தநாடு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் கொள்முதல் செய்யப்படாததால் சாலையில் கிடந்து காய்ந்து சேதமடைந்து வருகிறது. எனவே கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் திருவோணம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை மூலமாக கரும்பு பயிரிட்டு வருகின்றனர். கரும்பு விளைந்த பிறகு சம்பந்தப்பட்ட ஆலையின் அலுவலர்கள் விவசாயிகளின் நிலத்தில் விளைந்த கரும்புகளை வெட்டி வாகனம் மூலமாக சர்க்கரை ஆலைக்கு கொண்டு சென்று அதை அரைத்து தன்மைக்கு ஏற்ப தொகையை விவசாயிகளுக்கு அளிப்பார்கள். ஒரத்தநாடு பகுதியில் விளைந்த கரும்புகளை காலம் கடந்தும் கொள்முதல் செய்யாமல் ஆலை அலுவலர்கள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

சாலையில் காயும் கரும்புகள்

விளைந்த கரும்புகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் ஆலை அலுவலர்களிடம் பலமுறை முறையிட்ட பிறகு தான் கரும்பை வெட்டுவதற்கு அலுவலர்கள் அனுமதி தருவதாக கூறப்படுகிறது. இதனால் ஒரத்தநாட்டை அடுத்துள்ள அக்கரைவட்டம் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் சாலை ஓரங்களில் மலைபோல குவித்து வைக்கப்பட்டு காய்ந்து வருகிறது. இதன் பிறகும் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை கொள்முதல் செய்து வாகனங்களில் ஆலைக்கு எடுத்து செல்ல அலுவலர்கள் வார கணக்கில் காலதாமதம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நஷ்டம்

தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் கரும்புகள் காய்ந்து கரும்பில் இருந்து கரும்புச்சாறின் அளவு குறைந்து விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெளிமாவட்டத்திலிருந்து கரும்புகளை கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலை உள்ளூர் விவசாயிகளின் கரும்புகளை கொள்முதல் செய்யாமல் காலம் கடத்துவதை தவிர்த்து உள்ளூர் விவசாயிகள் விளைவித்த கரும்புகளை குறிப்பிட்ட காலத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story