திருமருகல் பகுதியில் வீடுகள், கடைகளில் திருடிய டிரைவர் கைது 25 பவுன் நகைகள் பறிமுதல்


திருமருகல் பகுதியில் வீடுகள், கடைகளில் திருடிய டிரைவர் கைது 25 பவுன் நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 7:08 PM GMT)

திருமருகல் பகுதியில் வீடுகள் - கடைகளில் திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஆதினக்குடி, போலகம், மானாம்பேட்டை, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணம் அடிக்கடி திருட்டு போனது. இதைப்போல திருமருகல் பகுதி கடைகளிலும் பணம் திருட்டு போனது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில், திட்டச்சேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் திருமருகல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீயாத்தமங்கை கைகாட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் வேகமாக தப்பி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர் திருமருகல் அருகே உள்ள சேகல் வடக்கு தெருவை சேர்ந்த வீராச்சாமி மகன் சட்டநாதன் (வயது35) என்றும் இவர் திருப்பூரில் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருமருகல் பகுதியில் உள்ள பல இடங்களில் வீடுகள் மற்றும் கடைகளில் தொடர்ந்து திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து திட்டச்சேரி போலீசார் சட்டநாதனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 25 பவுன் நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story