நாச்சியார்கோவில் அருகே கோவிலின் பூட்டை உடைத்து சாமி சிலைகள் திருட்டு


நாச்சியார்கோவில் அருகே கோவிலின் பூட்டை உடைத்து சாமி சிலைகள் திருட்டு
x
தினத்தந்தி 19 May 2019 11:15 PM GMT (Updated: 19 May 2019 6:50 PM GMT)

நாச்சியார்கோவில் அருகே கோவிலின் பூட்டை உடைத்து சாமி சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடியில் தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காதணி விழா நடைபெற்றுள்ளது.

விழா முடிந்ததும் கோவிலை பூசாரி செல்வம் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மதியம் பூஜை செய்ய கோவிலை திறக்க செல்வம் வந்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த 2½ அடி உயரமுள்ள வெண்கலத்தாலான அர்ஜூனன் சிலை, திரவுபதி அம்மன் சிலை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுதொடர்பாக கோவில் நிர்வாகி மாரிமுத்து, நாச்சியார் கோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story