உப்பிடமங்கலம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி போலீசார் விசாரணை


உப்பிடமங்கலம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 May 2019 10:15 PM GMT (Updated: 22 May 2019 8:53 PM GMT)

உப்பிடமங்கலம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா கீரனூர் ஊராட்சி புதுவாடியை சேர்ந்தவர் அழகுராஜ் (வயது 55). குன்னுடையான் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (45). இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் சொந்தவேலை காரணமாக ஒரே மோட்டார் சைக்கிளில் உப்பிடமங்கலம் வந்தனர். இங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது உப்பிடமங்கலம் சேங்கல் சாலையில் லட்சுமணபட்டி பிரிவு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

2 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அழகுராஜ் பரிதாபமாக இறந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற காளியப்பனும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story