தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் நினைவு தினம்: கனிமொழி-அரசியல் கட்சியினர் அஞ்சலி


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் நினைவு தினம்: கனிமொழி-அரசியல் கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 9:53 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு கனிமொழி-அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் 13 பேரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழர் தேசிய கொற்றம் தலைவர் வியனரசு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் வைத்து அஞ்சலி கூட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரசல், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களும் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் கட்சி அலுவலகம் முன்பு துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க துணை தலைவர் சண்முககுமாரி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் விஜயலட்சுமி, மீனவர் அணி இணை செயலாளர் சுகந்திகோமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர கிழக்கு பகுதி அ.ம.மு.க. செயலாளர் எல்.எட்வின் பாண்டியன் தலைமையில் கிழக்கு பகுதி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பிரதிநிதிகள் இன்னாசி, சுடலைமுத்து, வட்ட செயலாளர்கள் மணிகண்டன், தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் மணிவேந்தன், வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் சந்தனசேகர் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் மணி ஆச்சாரி, இளைஞர் பெருமன்ற தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் பாலமுருகன், இந்திய வக்கீல்கள் சங்க அமைப்பாளர் ராமச்சந்திரன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் சந்திப்பு பகுதியில் நாட்டு படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அவர்கள் தங்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். தூத்துக்குடி தருவை மைதானத்தில் நேற்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.


Next Story