தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு


தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 23 May 2019 10:30 PM GMT (Updated: 23 May 2019 9:04 PM GMT)

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணியை தென்மண்டல விமான நிலையங்களின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் 5 முறை விமான சேவை நடந்து வருகிறது. இதில் தினமும் 600 பயணிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக அரசு 600.10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்கியுள்ளது. தொடர்ந்து விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை தென்மண்டல விமான நிலையங்களின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரிவாக்க பணிகளில் முதல் கட்டமாக விமானங்கள் இரவு நேரத்தில் தரையிறங்கும் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அணுகு பாதையில் அமைக்கப்பட்டு உள்ள மின்விளக்குகளை ஸ்ரீகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் அணுகு பாதையில் இருந்த 3 மரங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு நடப்பட்டது. அந்த பணியையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் விமான நிலைய ஓடுதள பகுதியில் கண்காணிப்பு பணிகளுக்காக கூடுதலாக ஒரு வாகனம் வாங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் அதிநவீன புதிய தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், சென்னை கட்டுமான பிரிவு பொது மேலாளர் ராஜசேகர், கூடுதல் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை விமான நிலைய எலக்ட்ரிக்கல் பிரிவு துணை பொது மேலாளர் ராஜூ, தூத்துக்குடி விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவு துணை பொது மேலாளர் ஷைகிமோள் ஜார்ஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story