மின் கட்டண உயர்வினை கண்டித்து போராட்டம் - அ.தி.மு.க. அறிவிப்பு


மின் கட்டண உயர்வினை கண்டித்து போராட்டம் - அ.தி.மு.க. அறிவிப்பு
x
தினத்தந்தி 27 May 2019 12:00 AM GMT (Updated: 26 May 2019 11:58 PM GMT)

மின் கட்டண உயர்வினை ரத்துசெய்யாவிட்டால் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தேர்தலுக்கு முன்பு போலியான வாக்குறுதிகளை அள்ளிவீசி புதுவை மாநில மக்களை ஏமாற்றுவதையே காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வாடிக்கையாக வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின்போதும் ஒரு நாளைக்கு ஒரு வாக்குறுதியை முதல்–அமைச்சர் நாராயணசாமி கொடுத்து வந்தார்.

இலவச அரிசி வந்துவிட்டது. அதிகாரம் கிடைத்துவிட்டது. திட்டங்களை செயல்படுத்த இனி தடையில்லை என அடுக்கடுக்காக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வந்தார். இன்றுவரை பல தொகுதிகளில் இலவச அரிசி வினியோகம் செய்யவில்லை. அதிகாரம் கிடைத்துவிட்டதால் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் குப்பை வரி ரத்துசெய்யப்படும், மின் கட்டணம் குறைக்கப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதை நம்பி புதுவை மாநில மக்கள் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தனர். வாக்களித்த கையில் மை அழியும் முன்னரே அரசு மக்களுக்கு கட்டண உயர்வினை பரிசாக அளித்துள்ளது. ஏழை மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாமல் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளது. மின் கட்டணமாக 4.59 சதவீதம், துணை மின் கட்டணமாக 4 சதவீதம் என மொத்தம் 8.59 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் ரூ.1000 மின் கட்டணம் செலுத்திய குடும்பத்தினர் கூடுதலாக சுமார் ரூ.100 மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் மின்பாக்கி வைத்துள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புதுவை அரசு ஸ்மார்ட் மீட்டர் வாங்கிய விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து கட்சி தலைமையின் அனுமதி பெற்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அ.தி.மு.க. சார்பில் புகார் தெரிவிக்கப்படும். புதுச்சேரி அரசு மின் கட்டண உயர்வினை ரத்து செய்யாவிட்டால் மாநில மக்களை திரட்டி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.


Next Story