ரெயில்களில் நகை பறிப்பை தடுக்க கூடுதல் ரோந்து பணி - சேலத்தில், டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேட்டி


ரெயில்களில் நகை பறிப்பை தடுக்க கூடுதல் ரோந்து பணி - சேலத்தில், டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 28 May 2019 11:15 PM GMT (Updated: 28 May 2019 10:50 PM GMT)

ரெயில்களில் நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க கூடுதல் ரோந்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலத்தில் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சூரமங்கலம்,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவேலிபாளையம் பகுதியில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதை பயன்படுத்தி சமீபத்தில் நள்ளிரவில் அந்த வழியாக மெதுவாக செல்லும் ரெயில்களில் கொள்ளையர்கள் ஏறினர். பின்னர் அவர்கள் பெண்களிடம் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் சேலத்தில் ரெயில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தமிழக ரெயில்வே துறை போலீஸ் உயர் அதிகாரிகள் சேலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அதன்பேரில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று சேலம் ஜங்ஷனில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் தமிழக ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஆண்டுதோறும் வழக்கமான ஆய்வு மேற்கொண்டார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் ரெயில்வே போலீசார் உடனிருந்தனர். அவர்களிடம், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும், ரெயிலில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும், அவர்களின் குறைகளையும் டி.ஐ.ஜி. கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவேலிபாளையம் ரெயில் கொள்ளை தொடர்பாக மராட்டிய மாநிலம் சோலாப்பூர் சிறையில் உள்ள 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். சேலம் முதல் திருப்பத்தூர் வழியாக செல்லும் ரெயில்களில் கூடுதலான போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) பொருத்தப்படும். ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதுகுறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ரெயில்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து பயணிகள் தைரியமாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முன்வரவேண்டும். இலவச உதவி எண் 1512 மூலமாகவோ அல்லது ஜி.ஆர்.பி. செயலி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் தெரிவிக்கும் நபர் குறித்த ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story