குமரி மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் சமூக சேவையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள்


குமரி மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் சமூக சேவையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள்
x
தினத்தந்தி 29 May 2019 11:00 PM GMT (Updated: 29 May 2019 9:12 PM GMT)

குமரி மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் சமூக சேவையில் ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள்.

திக்கணங்கோடு,

குமரி மாவட்டத்தில் இருந்து ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வரும் போது சமூகப்பணியாற்ற முடிவு செய்தனர். இதற்காக “கன்னியாகுமரி ஜவான்ஸ்“ என்ற பெயரில் வாட்ஸ்-அப் குழுக்களை தொடங்கினர். இந்த குழுவில் சில ஓய்வு பெற்றவர்களும், விடுப்புக்கு சொந்த ஊருக்கு வருபவர்களும் அங்கம் வகிக்க முடியும்.

விடுப்பு முடிந்ததும் இந்த குழுவிலிருந்து கழன்று விடுவர். இவர்களை ஒருங்கிணைக்க தலைவர், செயலாளர், பொருளாளர் என நிர்வாகிகள் யாரும் இல்லை. எப்போதும் தற்காலிக உறுப்பினர்கள் தான். இதில் சுமார் 3,500 பேர் உள்ளனர்.

நிழற்குடை சீரமைப்பு

முக்கிய பணிகளாக பயணிகள் நிழற்குடைகளை சுத்தப்படுத்தி மக்களை பயன்படுத்த செய்தல், அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று முதியோர்களுக்கு உதவி செய்தல், உணவு சமைத்து பரிமாறுதல், ரத்ததானம் செய்தல், ‘கிளன் கிளன்‘ என்ற பெயரில் சாலையோரங்களில் மரங்களை நடுதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பணியின் போது அணிந்து கொள்ள சீருடைகளையும் தயார் செய்துள்ளனர்.

மார்த்தாண்டம் அருகே பம்மம், புலியூர்குறிச்சி, குழித்துறை ஆகிய இடங்களில் நிழற்குடைகளை சீரமைத்துள்ளனர்.

தற்போது நெய்யூரில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்தனர். தாங்கள் சீரமைத்துள்ள நிழற்குடையில் “விளம்பரம் செய்யாதீர் மீறுபவர்கள் ராணுவ வீரர்களை அவமதிப்பவர்கள் ஆவர்“ என்ற ஸ்டிக்கர்களையும் ஒட்டுகின்றனர். இப்பணியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். 

Next Story