சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி முன்னாள் ஊழியர் கைது


சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி முன்னாள் ஊழியர் கைது
x
தினத்தந்தி 30 May 2019 10:15 PM GMT (Updated: 30 May 2019 7:42 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

சென்னை ஆதம்பாக்கம் ஏரிக்கரை சாலையை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகன் வசந்தகுமார்(வயது49). இவர், சென்னை விமான நிலையத்தில் சரக்கு(கார்கோ) ஏற்றும் பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர், திருச்சி கே.கே.நகர் குறிஞ்சி நகரில் வசிக்கும் செல்வராஜ்(60) என்பவருடன் அறிமுகம் ஆனார்.

சென்னை விமான நிலையத்தில், தான் வேலை செய்து வருவதாகவும் அங்கு உங்களது மகன், உங்கள் சகோதரியின் மகன் ஆகிய இருவருக்கும் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். அவரது பேச்சை நம்பிய செல்வராஜ், கடந்த ஆண்டு(2018) ஜூன் மாதம் ரூ.3 லட்சத்தை வசந்தகுமாரிடம் கொடுத்துள்ளார்.

காலங்கள் கடந்து சென்றதே தவிர, வசந்தகுமார் உறுதி அளித்தபடி சென்னை விமான நிலையத்தில் செல்வராஜின் மகன் மற்றும் சகோதரியின் மகனுக்கு வேலைக்கான எவ்வித ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதனால், விரக்தியடைந்த செல்வராஜ் வேலை வாங்கிதரவில்லை என்பதால், தான் கொடுத்த ரூ.3 லட்சத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அதற்கு வசந்தகுமார் எவ்வித பதிலும் அளிக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரூ.3 லட்சம் கொடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வராஜ், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனனை சந்தித்து புகார் கொடுத்தார். அவர், திருச்சி கே.கே.நகர் போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், வசந்தகுமார் மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் பிரிவில் வேலைபார்த்த வசந்தகுமார் ஒழுங்கீனம் காரணமாக ஏற்கனவே பணியில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story