வரும் காலத்தில் மேகதாது திட்டம் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்: முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு


வரும் காலத்தில் மேகதாது திட்டம் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்: முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2019 10:15 PM GMT (Updated: 11 Jun 2019 7:49 PM GMT)

வரும் காலத்தில்மேகதாது திட்டம் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

துங்கபத்ரா அணையில் தூர் அதிகமாக தேங்கி இருப்பதால், 33 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. அந்த நீரை சேகரிக்கும் வகையில் நவலி கிராமம் அருகே புதிதாக சிறிய அணை கட்டப்படும்.

துங்கபத்ரா அணையில் தூர்வார தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் புதிய நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் கூடுதலாக 66.66 லட்சம் எக்டேர் நிலத்திற்கு பாசன வசதியை ஏற்படுத்தப்படுகிறது.

இன்னும் 11.46 லட்சம் எக்டேர் நில பரப்பிற்கு பாசன வசதி ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கிராம குடிநீர் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் மூலம் குடிநீர் வசதியை ஏற்படுத்தும் ‘ஜலதாரே’ திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டம் மிக முக்கியமானது. வரும் காலத்தில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை இந்த திட்டம் பூர்த்தி செய்யும். எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.சி.வேலி (கோமரங்களா-சல்லகட்டா) திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்த திட்டத்தால் கோலார் பகுதி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும்.

கடந்த 2 பட்ஜெட்டுகளில் நீர்ப்பாசனத்துறைக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி மற்றும் மழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு குமாரசாமி பேசினார்.


Next Story