மேகதாது திட்ட பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உத்தரவு


மேகதாது திட்ட பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2019 10:45 PM GMT (Updated: 11 Jun 2019 7:59 PM GMT)

மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால், மேகதாது திட்ட பணிகளை விரைவாக ெதாடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உத்தரவிட்டார்.

பெங்களூரு,

நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் துணை முதல்- மந்திரி பரமேஸ்வர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். அதில் பரமேஸ்வர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் பாசன பகுதிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் நீர்ப்பாசனத்துறைக்கு பட்ஜெட்டில் 34 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை முழுமையாக பயன்படுத்தி, பாசன பகுதிகளை அதிகரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள். 5 ஆண்டுகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காலக்கெடு விதித்துக் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் பாசன பகுதி எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கும்.

பெங்களூருவில் காவிரி 5-வது கட்ட குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்த பிறகு, நகரில் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கு சட்ட சிக்கல் இருந்தால் அதை சரிசெய்து, இந்த திட்ட பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். நீர்ப்பாசனத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை எவ்வளவு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது, எந்தெந்த திட்ட பணிகள் நடந்து வருகின்றன என்பது குறித்து முழு தகவல்களை அதிகாரிகளிடம் இருக்க வேண்டும். இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.


Next Story