குரோம்பேட்டையில் ரெயில்வே சுரங்கப்பாதை: சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகள், கடைகள் இடிப்பு


குரோம்பேட்டையில் ரெயில்வே சுரங்கப்பாதை: சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகள், கடைகள் இடிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 7:35 PM GMT)

குரோம்பேட்டையில் ரெயில்வே சுரங்கப்பாதை புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலை விரிவாக்கம் செய்ய உள்ளதால், ராதாநகர் மெயின்ரோட்டில் உள்ள சில வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

ஆலந்தூர்,

குரோம்பேட்டை கிழக்குப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதிகளில் இருந்து ஜி.எஸ்.டி. சாலைக்கு இருசக்கரவாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் வர குரோம்பேட்டை ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ரெயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை கட்ட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2009–ம் ஆண்டு ரூ.14¾ கோடி செலவில் 4 சக்கர வாகனம் செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் தெற்கு ரெயில்வே இணைந்து ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கியது.

முதல்கட்டமாக ரூ.4 கோடி செலவில் ரெயில்வே சார்பில் ரெயில் தண்டவாள பாதைக்கு கீழ் கான்கிரீட் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டன. இதில் ரெயில்வே துறையில் பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன.

ரெயில் பாதைக்கு கிழக்குப்புறம் 1,935 சதுர மீட்டர், மேற்கு பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான 900 சதுர மீட்டர் நிலமும் இத்திட்டத்துக்கு தேவைப்பட்டது. இதை கையகப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையினர் செய்து வந்தனர்.

குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் உள்ள 46 கட்டிடங்கள் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக குறிப்பிட்ட அளவு இடிக்க வேண்டி இருந்ததால் அதற்காக ரூ.6 கோடியே 46 லட்சம் இழப்பீட்டு தொகையை நெடுஞ்சாலை துறை அறிவித்தது. ஆனால் இழப்பீட்டு தொகை போதாது என கூறி கட்டிட உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இழப்பீட்டு தொகையை கோர்ட்டு மூலம் பெற்றுக்கொள்ள அதற்கான தொகையை நெடுஞ்சாலை துறையினர் கோர்ட்டில் செலுத்தி விட்டனர். இந்த நிலையில் கட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு சுரங்கப்பாதை பணிகளுக்காக கட்டிடங்களை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த டிசம்பர் மாதம் குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலையில் கட்டிட அளவீட்டு பணிகளை தொடங்கினர். மேலும் கட்டிடங்களை இடிப்பதற்கு கடந்த பிப்ரவரி 28–ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள பள்ளி கட்டிடத்திற்கு மட்டும் கடந்த மார்ச் 30–ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்து 3 மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் கட்டிடங்களை அகற்றாததால் நேற்று நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுரங்கப்பாலத்திற்கு தேவையான இடங்களில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகளை தொடங்கினர்.

கட்டிடங்கள் இடிக்கப்பட்டு சுரங்கப்பாதைக்கான சாலைகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story