ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் வைகோ பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 7:39 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வருகிற 23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடை பெறும் என வைகோ தெரிவித்தார்.

செம்பட்டு,

ஸ்டெர்லைட் வழக்கு இன்று (அதாவது நேற்று) நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்ரயான் ஆகியோரது அமர்வுக்கு வந்தது. ஒரு தரப்பாக என்னை சேர்த்து கொள்ள வேண்டும் என்கிற மனுக்கள் குறித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் (வைகோ) தொடர்ந்து போராடி வருகிறேன் என்பதையும், தொடர்ந்த வழக்குகளையும் ெதரிவித்தேன். ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான வக்கீல் மாசிலாமணி, அரசின் ஆதரவாக கருத்துகளை கூறுவது என்றால் அனுமதிக்கலாமே தவிர, இவர்கள் ஒவ்வொருவரையும் அனுமதித்தால் நாள் கணக்கில் நீடித்து போகும், எல்லா ஆவணங்களையும் அவர்களுக்கு கொடுக்க முடியாது. அவசியமில்லை என சினிமா வழக்கின் தீர்ப்பை எடுத்து சுட்டிகாட்டி பேசினார்.

அப்போது ‘‘இந்த வழக்கை சினிமா உலக வழக்கோடு ஒப்பிட தேவையில்லை. இங்கு 13 பேர் காவு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கவில்லை. தமிழக அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தொடக்கத்தில் இருந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இயங்கி வந்தன. அரசும், அரசின் ஏற்பாட்டின் பேரில் தான் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேரும் படுகொலை செய்யப்பட்டார்கள். அதன்பிறகு மக்களின் கிளர்ச்சிக்கு பிறகு அரசு தன் நிலையை மாற்றிக்கொண்டது. ஆகவே அரசின் ஆதரவாக நான் பேசுவேன் என்று எதிர்பார்க்க கூடாது’’ என்றேன். என்னுடைய மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அறிகிறேன்.

வருகிற 20-ந்தேதி வழக்கு மீண்டும் தொடருகிறது. 24 ஆண்டுகளாக இடைவிடாது எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, நச்சு காற்றை வான வெளி மண்டலத்தில் தண்ணீர், நிலம், காற்று எல்லாம் நச்சு மயமாக்குவதால் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவனத்திற்கு தான் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கொடூர செயலாகும். இதனை எதிர்த்து இன்று (அதாவது நேற்று) மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக இருந்தது.

ஆனால் மதுரை ஐகோர்ட்டு வருகிற 23-ந் தேதி நடத்த அனுமதி அளித்துள்ளது. அதனால் வருகிற 23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டு கடுமையாக நிலவுகிறது. குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றனர். இன்னும் 10 நாட்களில் தமிழகத்தில் தண்ணீர் வறட்சி தாங்க முடியாத அளவில் பெரும் சோதனையாக அமையும். இது குறித்து போர்க்கால நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

ஏரி, குளங்களை தூர் வாரி ஆழப்படுத்தியிருந்தால் தண்ணீர் தேங்கியிருந்திருக்கும். மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் பெரும் அபாயம் ஏற்படும். அதனை எல்லாம் எதிர்பார்த்து தான் விவசாயிகள் நிலத்தை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விற்றுவிடுவார்கள் என எண்ணுகின்றனர்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ராசிமணலில் அணை கட்டுவதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். மாயமான சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த அரசு தான் பொறுப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story