அரியலூரில் குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு


அரியலூரில் குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:30 PM GMT (Updated: 12 Jun 2019 8:13 PM GMT)

பெரம்பலூர் மற்றும் அரியலூரில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

அரியலூர்,

உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம், ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள், குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றனர்.

அதைத்தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், உதவி ஆணையர் சேதுராமன், தனித்துணை ஆட்சியர் மனோகரன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முகமது யூசுப், ஆதிதிராவிடர் நல அதிகாரி மஞ்சுளா, பெரம்பலுர் தொழிலாளர் துணை ஆய்வாளர் ஜெயராஜ், தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி, குழந்தைகள் உதவி மைய (சைல்டு லைன்) அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்- மனிதச் சங்கிலி

இதேபோல் நேற்று முன்தினம் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

இதேபோல் அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக உலக குழந்தை தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாரயணன் தலைமையில் மனிதச்சங்கிலி நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு தலைமையில், அனைத்து அரசு அலுவலர்களும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, தொழிலாளர் துறை ஆய்வாளர் குருநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story