கர்நாடகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டம்: முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்


கர்நாடகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டம்: முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 8:43 PM GMT)

கர்நாடகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி திட்ட தொடக்க விழா, புதிதாக 100 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறப்பு விழா, ஏற்கனவே செயல்பட்டு வரும் கர்நாடக பப்ளிக் பள்ளிகளில் மழலையர் (எல்.கே.ஜி.) வகுப்புகள் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு ஆங்கில வழி கல்வி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

போட்டி நிறைந்த உலகில் போட்டியை எதிர்கொள்ளதிறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்தில் 1,000 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஏழை குடும்பங்களின் குழந்தைகளுக்கு அநீதி ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த ஆங்கில வழி கல்வி திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

இந்த ஆங்கில வழி கல்வி வழியை கர்நாடகத்தில் தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. தனிப்பட்ட முறையிலும் எனக்கு எதிராக விமர்சனம் செய்தனர். நானோ அல்லது பரமேஸ்வரோ கன்னடத்திற்கு எதிரானவர்கள் கிடையாது.

ஆங்கில வழி கல்வி மட்டுமின்றி தரமான கல்வியை அளிப்பது தான் அரசின் நோக்கமாகும். 1-ம் வகுப்பில் 30 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை கட்டுப்பாடு விதித்ததால், தனியார் பள்ளிகளுடன் கூட்டு சேர்ந்துவிட்டோம் என்று சொல்வது சரியல்ல.

அடுத்த ஆண்டு அதிக வகுப்புகளை தொடங்குவோம். இந்த வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலக விடுமுறையை 15-ல் இருந்து 10 ஆக குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கல்வித்துறை என்னிடம் தான் உள்ளது. அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். இதில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story