பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர்கள் தகவல்


பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர்கள் தகவல்
x
தினத்தந்தி 15 Jun 2019 11:00 PM GMT (Updated: 15 Jun 2019 8:00 PM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு 16 விடுதிகளும், மாணவிகளுக்கு 10 விடுதிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு 5 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

இதேபோல அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு 20 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்கு 9 பள்ளி விடுதிகளும், 1 கல்லூரி விடுதியும் என மொத்தம் 32 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட விடுதிகளில் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். விடுதியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தங்கி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

8 கிலோ மீட்டருக்கு மேல்

பள்ளி விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ- மாணவிகளும் கல்லூரி விடுதிகளில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ- மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ- மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ- மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

விடுதியில் சேர மாணவ- மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

வருகிற 20-ந் தேதிக்குள்...

விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளை பொறுத்தவரை வருகிற 20-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத்தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இந்த சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ- மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பெற்று, பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), விஜயலட்சுமி (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story