கத்தியால் குத்தி தொழிலாளி கொலை: மைத்துனர் உள்பட 2 பேர் கைது


கத்தியால் குத்தி தொழிலாளி கொலை: மைத்துனர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2019 10:15 PM GMT (Updated: 16 Jun 2019 7:06 PM GMT)

குத்தாலத்தில் தொழிலாளி கொலை வழக்கில் மைத்துனர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாப்பனம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 33). இவரும், நாகை மாவட்டம் குத்தாலம் அருணகிரிநாதர் தெருவில் இரும்பு கடை வைத்து நடத்தி வரும் மாரிமுத்து என்பவரும் உறவினர்கள். முரளி, தனது சிறுவயதில் இருந்தே மாரிமுத்துவின் இரும்பு கடையில் கூலிவேலை செய்து வந்தார்.

மாரிமுத்துவுக்கு 2 மனைவிகள். இதில் 2-வது மனைவியின் மகள் திவ்யாவுக்கும் முரளிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர்.

திவ்யா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு முரளியை விட்டு விட்டு முரளியின் அத்தை மகன் சுரேஷ் என்பவருடன் சென்னைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதுகுறித்து முரளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாவை மீட்டு மீண்டும் முரளியுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைத்தனர். கடந்த 6 மாதங்களாக முரளியும், திவ்யாவும் நீடாமங்கலத்தில் வசித்து வந்தனர்.

காயங்களுடன் பிணம்

இந்தநிலையில் முரளிக்கும் அவரது மனைவி திவ்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் திவ்யா குத்தாலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கடந்த 14-ந் தேதி இரவு முரளி, தனது மனைவியை பார்க்க குத்தாலத்துக்கு சென்றார். அப்போது முரளியை, திவ்யாவின் தம்பி செல்வகணபதி(19) மதுகுடிக்க அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னர் முரளி வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் காலை குத்தாலம் உமையாள்புரம் பைரவா நகரில் உள்ள ஒரு திடலில் கத்திக்குத்து காயங்களுடன் முரளி இறந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத் தினர்.

மேலும் திவ்யாவின் தம்பி செல்வகணபதியை போலீசார் சந்தேகத்தின் பேரில் தேடினர். அப்போது அவர்

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் உள்ள அவரது நண்பர் கமலஹாசன்(19) வீட்டில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று செல்வகணபதி, கமலஹாசன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வகணபதியும், கமலஹாசனும் சேர்ந்து முரளியை கொலை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

செல்வகணபதி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது சகோதரி திவ்யாவை, முரளி அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். எனவே முரளியை மது அருந்த அழைத்து சென்று எனது நண்பர் கமலஹாசனுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தேன். பின்னர் நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டோம். இவ்வாறு செல்வகணபதி தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

Next Story