குடிநீர் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு


குடிநீர் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 24 Jun 2019 10:15 PM GMT (Updated: 24 Jun 2019 7:04 PM GMT)

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

சிவகங்கை,

இளையான்குடி அருகே பஞ்சனூர் கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:– இளையான்குடி தாலுகா புதுக்கோட்டை ஊராட்சியில் பஞ்சனூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 150–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் எங்கள் கிராமத்திற்கு பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. எங்கள் கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் ஊரில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் நீரை பயன்படுத்தி வந்தோம். ஆனால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கிணறு மற்றும் ஆழ்குழாயில் நீர் முற்றிலும் இல்லை. கடும் வெப்பம் காரணமாக நிலத்தடி நீர் கீழே சென்று விட்டது.

இதனால் எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தூரமுள்ள சாலைக்கிராமம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இருந்து குடிநீர் எடுத்து வருகிறோம்.

இளையான்குடி, சாலைக்கிராமம் ஆகிய ஊர்களுக்கு சென்று கேன் குடிநீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதனால் கடும் பாதிப்படைந்து வருகிறோம். எனவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் எங்கள் கிராமத்திற்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும். எங்கள் கிராமத்திற்கு போதிய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


Next Story