தங்கநகை சேமிப்பு திட்டம் நடத்தி ரூ.4 கோடி மோசடி - ஏமாற்றப்பட்ட ஏஜெண்டுகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


தங்கநகை சேமிப்பு திட்டம் நடத்தி ரூ.4 கோடி மோசடி - ஏமாற்றப்பட்ட ஏஜெண்டுகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 26 Jun 2019 12:27 AM GMT)

தங்கநகை சேமிப்பு திட்டம் நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்தவரை கைது செய்ய வேண்டும் என்று அந்நிறுவன ஏஜெண்டுகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியில் ஒருவர் பொதுமக்களிடம் தவணை முறையில் பணம் பெற்று நிறுவனம் நடத்தி வந்தார். தொடர்ந்து அவர் தீபாவளி பரிசளிப்பு திட்டம், தங்க நகை சேமிப்பு திட்டம், வீட்டுமனை திட்டம் போன்ற திட்டங்களை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி, அவர்களை அத்திட்டத்தில் இணைத்து பணம் வசூலித்து வந்தார்.

மேலும் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்ய ஏஜெண்டுகளையும் அவர் நியமித்தார். அதன்படி ஏஜெண்டுகள் மூலம் ஆற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரை இத்திட்டத்தின் கீழ் சேர்த்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டங்களை அந்த நிறுவன அதிபர் செயல்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென அவர் தனது நிறுவனம் நஷ்டம் அடைந்து விட்டதாக கூறி மூடி விட்டார். சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த வாடிக்கையாளர் பலர் ஏஜெண்டுகளிடம் பணம் கேட்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் சுமார் 25 ஏஜெண்டுகள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் பணியாற்றி வந்த நிறுவன அதிபர் திடீரென நிறுவனத்தை மூடி விட்டார். எனவே அந்த நிறுவனத்தில் எங்கள் மூலம் பணம் முதலீடு செய்த பொதுமக்கள் எங்களிடம் பணம் கேட்கின்றனர். எங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சுமார் ரூ.4 கோடி வரை பணம் கொடுக்க வேண்டும். அவர் பண மோசடி செய்து விட்டார். எனவே பண மோசடி செய்தவரை கைது செய்து எங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Next Story