திருப்பூரில் குடிபோதையில் போலீசை தாக்கியவர் கைது - சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறியதால் வியாபாரிகள் அதிர்ச்சி


திருப்பூரில் குடிபோதையில் போலீசை தாக்கியவர் கைது - சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறியதால் வியாபாரிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 1 July 2019 11:07 PM GMT (Updated: 1 July 2019 11:07 PM GMT)

திருப்பூரில் குடிபோதையில் போலீசை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த முரளி (எ) பிலாலால் என்பவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவருடைய மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த முரளி பணியில் இருந்த போலீஸ்காரர் பொன்னங்கண் என்பவரிடம் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து பொன்னங்கண் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவத்தை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இதையடுத்து நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாலையோர வியாபாரிகளிடம் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு, வேறு இடத்திற்கு மாற்றுமாறு கூறியதாக தெரிகிறது. போலீசார் திடீரென கடைகளை அப்புறப்படுத்துமாறு கூறியதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறிய தாவது:- போலீஸ்காரரை அந்த நபர் தாக்கிய சம்பவம் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதை அந்த வழியாக சென்ற பலரும் செல்போனில் படம் பிடித்ததுடன், அதை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். ஆனால் போலீசார் நாங்கள்தான் பதிவிட்டதாக நினைத்து எங்கள் கடைகளை அப்புறப்படுத்துமாறு கூறுகின்றனர். திடீரென அப்புறப்படுத்த கூறினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story