காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர் சாவு; பெண் போலீஸ் தாக்கியதாக தாய் புகார்


காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர் சாவு; பெண் போலீஸ் தாக்கியதாக தாய் புகார்
x
தினத்தந்தி 3 July 2019 10:40 PM GMT (Updated: 3 July 2019 10:40 PM GMT)

காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தரை பெண் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக அவரது தாய் புகார் கூறியுள்ளார்.

காஞ்சீபுரம்,

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம், ராஜாமகேந்திரவர்மபுரத்தை சேர்ந்தவர் நாராயணரெட்டி. இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 44). இவர்களது மகன் ஆகாஷ் (22). தாய், மகன் இருவரும் நேற்று காலை காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதரை தரிசிக்க வந்தனர்.

பிற்பகல் இவர்கள் இலவச தரிசன வரிசையில் நின்று, அத்திவரதரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது ஆகாஷ் தனது செல்போனில் அத்திவரதரை படம் எடுத்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு பெண் போலீஸ் ஆகாஷை அழைத்து, செல்போனில் படம் எடுக்கக் கூடாது என்று கண்டித்ததாக தெரிகிறது.

அதையும் மீறி, மிகுந்த ஆர்வத்துடன் அத்திவரதரை ஆகாஷ் படம் எடுத்தார். கோபம் அடைந்த அந்த பெண் போலீஸ் ஆகாஷை அழைத்து, தாய் கண்ணெதிரே ஆகாஷ் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆகாஷ் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து அத்திவரதரை சாமி தரிசனம் செய்ய வந்தபோது மகன் ஆகாஷை பறிகொடுத்த தாய் நாகேஸ்வரி, அந்த பெண் போலீஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story