பெட்ரோல்-டீசல் மீதான வரி விதிப்பால் விலைவாசி உயரும் திருச்சியில் வைகோ பேட்டி


பெட்ரோல்-டீசல் மீதான வரி விதிப்பால் விலைவாசி உயரும் திருச்சியில் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 7 July 2019 11:15 PM GMT (Updated: 7 July 2019 4:59 PM GMT)

பெட்ரோல்-டீசல் மீதான வரி விதிப்பால் விலைவாசி உயரும் என்று திருச்சியில் வைகோ தெரிவித்தார்.

செம்பட்டு,

‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க கோரிய மசோதா நிராகரிக்கப்பட்டதில் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு மக்களை ஏமாற்றி வந்திருக்கிறது. அல்லது தமிழக அரசை நம்ப வைத்து மத்திய அரசு கழுத்தை அறுத்ததா? என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்து வரும் தொடர் அநீதிகளில் இதுவும் ஒன்று. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகமாகும்.

‘நீட்’ தேர்வால் தமிழகத்தில் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தும் ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாததால் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தங்களது மருத்துவ கனவு நிறைவேறாதா? என்று எண்ணி உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க கோரிய மசோதா நிராகரிக்கப்பட்டதை மத்திய அரசின் வக்கீல் கோர்ட்டில் தெரிவித்திருப்பது தமிழக அரசின் கன்னத்தில் அறைவதை போல உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் நலமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. மாநிலங்களவை தேர்தலில் என்னுடைய வேட்புமனு ஏற்கப்படுமா? என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது. 9-ந்தேதி (நாளை) நடைபெறும் வேட்புமனு பரிசீலனையின் போது தான் தெரியும். அதுவரை தோழர்கள் அமைதியாக, பொறுமையாக இருக்க வேண்டும். பரிசீலனையில் இருப்பதால் தற்போது நான் எதுவும் சொல்லவில்லை. பெட்ரோல்-டீசல் மீதான வரி விதிப்பால் மாத ஊதியம் வாங்குபவர்கள், நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த வரி விதிப்பினால் விலைவாசி உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story