மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி ஈரோடு கருங்கல்பாளையம் தம்பதி பரிதாப சாவு; டிரைவர் கைது


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி ஈரோடு கருங்கல்பாளையம் தம்பதி பரிதாப சாவு; டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 July 2019 10:54 PM GMT (Updated: 7 July 2019 10:54 PM GMT)

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கருங்கல்பாளையம் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம்,

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). இவருடைய மனைவி கலையரசி (33). தறித்தொழிலாளிகள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் தங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை அருகே உள்ள புள்ளாபாளையத்திற்கு மோட்டார்சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்கள் உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை செல்வம் ஓட்டி வந்தார். கலையரசி பின்னால் அமர்ந்திருந்தார். விட்டம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம், கலையரசி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து மொளசி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சரவணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவன், மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story