விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல் கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு தர்ணா


விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் சாலை மறியல் கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு தர்ணா
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 7:39 PM GMT)

விலையில்லா மடிக் கணினி கேட்டு எசனை, வேப்பந்தட்டையில் முன்னாள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மற்றொரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ-மாணவிகளுக்கு இன்னும் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ-மாணவிகள், அவர்கள் படித்த பள்ளிகள் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ-மாணவிகள் உடனடியாக மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று காலையில் பள்ளியை முற்றுகையிட்டு பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எசனையில் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சாலையின் இரு புறங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை சாலை மறியலை கைவிடுமாறும், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். ஆனாலும் மாணவர்கள் மறியலை கைவிடாமல் மடிக் கணினி உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோஷத்தை தொடர்ந்து எழுப்பினர். இதையடுத்து போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017-18-ம், 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 பயின்ற மாணவ-மாணவிகள் தங்களுக்கும் உடனடியாக மடிக் கணினிகள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் முன்பு உள்ள சாலையில் திடீரென்று அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் அரசிடம் இருந்து மடிக்கணினிகள் வந்தவுடன் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

இதே போல் கைகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 படித்து முடித்த மாணவ-மாணவிகள் தங்களுக்கும் உடனடியாக மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று காலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதன் முன்பு சிறிது நேரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இது தொடர்பான மனு ஒன்றினை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Next Story