ஈரோடு பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது புகை வந்த நடமாடும் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் மாயம் போலீஸ் விசாரணை


ஈரோடு பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது புகை வந்த நடமாடும் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் மாயம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 12 July 2019 11:15 PM GMT (Updated: 12 July 2019 7:22 PM GMT)

ஈரோடு பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தபோது, புகை வந்த நடமாடும் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 லட்சம் மாயமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு பவானி ரோடு பன்னீர்செல்வம் பூங்கா பின்புறம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் மூலம் நடமாடும் ஏ.டி.எம். மையம் இயக்கப்படுகிறது. நடமாடும் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கப்பட்டு ஈரோடு பஸ்நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் கொண்டு நிறுத்தப்படும்.

அதில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை வங்கி ஏ.டி.எம். அட்டைகளை செலுத்தி எடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு நேற்று இந்த ஏ.டி.எம். வாகனம் ஈரோடு பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. நண்பகல் 1.30 மணி அளவில் ஏ.டி.எம். எந்திரம் பொருத்திய வாகனத்தில் இருந்து ‘குபு குபு’ என புகை வந்தது. அதைக்கண்டு அக்கம் பக்கத்தினர் குரல் எழுப்பினார்கள்.

உடனடியாக வாகனத்தில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் தீ அணைக்கப்பட்டது. பின்னர் அந்த நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் உடனடியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தில் சோதனையிட்டபோது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த தொகையில் ரூ.9 லட்சத்தை காணவில்லை. மீண்டும் மீண்டும் பணத்தை சரிபார்த்த அதிகாரிகள், ரூ.9 லட்சம் காணாமல் போயிருந்ததை உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு வங்கி அதிகாரிகள், நடமாடும் ஏ.டி.எம். எந்திர பணியாளர், வாகன ஓட்டுனர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘கடந்த 10–ந் தேதி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 லட்சம் வைக்கப்பட்டது. இதற்கான கணக்கு உள்ளது. தற்போது சோதனை செய்தபோது வாகனத்தில் ரூ.9 லட்சம் குறைவாக இருக்கிறது. ஆனால் அந்த பணத்தை யாரும் ஏ.டி.எம். எந்திரம் மூலமாக எடுத்ததாக பதிவுகள் இல்லை. பணம் எப்படி மாயமானது? என்பது குறித்தும் தெரியவில்லை’ என்றார்கள்.

அதைத்தொடர்ந்து போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புபவர், பணம் கொண்டு வந்து வழங்கும் அதிகாரி உள்ளிட்டவர்களை விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்து உள்ளனர்.

ஏ.டி.எம். எந்திரத்தில் முழுமையாக பணம் வைக்கப்பட்டதா? அல்லது பணத்தை வைக்காமல், அப்படியே அபேஸ் செய்து விட்டு வாகனத்தை எரிக்க முயற்சி செய்து இருக்கிறார்களா?. அல்லது ஏ.டி.எம். எந்திரத்தில் மர்ம மனிதர்கள் கைவரிசை காட்டியபோது புகை வந்ததா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் நடமாடும் ஏ.டி.எம். எந்திரத்தில் புகை வந்ததே பரபரப்பை ஏற்படுத்தி இருக்க, அதில் இருந்த ரூ.9 லட்சம் மாயமாகி இருப்பது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story