சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட 3 வயது குழந்தை திருப்போரூரில் மீட்பு


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட 3 வயது குழந்தை திருப்போரூரில் மீட்பு
x
தினத்தந்தி 16 July 2019 11:00 PM GMT (Updated: 16 July 2019 5:07 PM GMT)

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை திருப்போரூரில் போலீசார் மீட்டனர்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம் சிங், நீலாவதி தம்பதி தங்களது குழந்தை சோம்நாத் (வயது 3) உடன் ரெயில் நிலையத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நீலாவதி திடீரென நள்ளிரவில் விழித்து பார்த்தபோது, சோம்நாத் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார். சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்காததால், சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் தம்பதியினர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சென்டிரல் ரெயில்வே போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்தி பூங்கா ரெயில் நிலையம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து, ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து அந்த மர்ம நபர் குழந்தையுடன் வெளியே செல்வது போன்ற காட்சிகள் பதிவானது. இதையடுத்து தமிழக ரெயில்வே ஐ.ஜி. வனிதாவின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் குழந்தையை தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்போரூர் பஸ் பணிமனையில் குழந்தை ஒன்று இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அந்த குழந்தை சோம்நாத் தான் என்பதை உறுதி செய்த பின்னர், குழந்தையை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் குழந்தையை கடத்தி சென்ற அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பின் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சென்டிரல் ரெயில்வே துணை சூப்பிரண்டு முருகன் தெரிவித்தார்.

Next Story