லாலாபேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


லாலாபேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 July 2019 11:00 PM GMT (Updated: 17 July 2019 8:03 PM GMT)

லாலாபேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள வேங்காம்பட்டி காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஆழ்குழாய் மூலம் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு குழாய் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் போதுமானதாக வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூடுதலாக குடிநீர் குழாய் அமைத்து தரவேண்டும் என்று நேற்று காலிக்குடங்களுடன் வேங்காம்பட்டிகாலனியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரபாகரன், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக கூடுதலாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story