ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கன்னியாகுமரிக்கு நாளை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கன்னியாகுமரிக்கு நாளை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 7:15 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாளை (திங்கட்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கன்னியாகுமரி,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாக நாளை (திங்கட்கிழமை) கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவிற்கு வருகிறார். அவருக்கு கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் கேந்திர வளர்ச்சி குறித்து கேந்திராவில் அகில இந்திய தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கும் செல்கிறார்.

மோகன் பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் நடந்தது. விவேகானந்தா கேந்திர ஆர்.எஸ்.எஸ். நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் முத்து, கண்மணி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிரவீன்ரகு, தங்கசிவம், தீயணைப்புதுறை அலுவலர் வெங்கட சுப்பிரமணியன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், விவேகானந்தா கேந்திர நிர்வாகி ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story