ஆட்டோ டிரைவர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை: தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது


ஆட்டோ டிரைவர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை: தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 24 July 2019 12:00 AM GMT (Updated: 23 July 2019 7:21 PM GMT)

நெற்குன்றத்தில் ஆட்டோ டிரைவர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், சக்தி நகர், 24–வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (என்ற) சுனில்(வயது 28). ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி காயத்ரி (24). இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். நாகராஜின் நண்பரான மகேந்திரனுக்கும், காயத்ரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இதனை நாகராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி மற்றும் மகேந்திரனின் மனைவி பானு ஆகியோர் ஒன்று சேர்ந்து நாகராஜ் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த போது, துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

இதனால் காயத்ரி மற்றும் பானு ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் மகேந்திரனை கோயம்பேடு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த மகேந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில், மகேந்திரனுக்கும், காயத்ரிக்கும் பழக்கம் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக தனக்கு துரோகம் செய்த மகேந்திரனை தீர்த்துக்கட்டப் போவதாக நாகராஜ் கூறி வந்ததாகவும், நாகராஜ் தன்னை தீர்த்துக்கட்டி விடுவாரோ என்ற அச்சத்தில் நாகராஜை கொலை செய்ய மகேந்திரன் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

அதற்காக தனது மனைவி பானு மற்றும் கள்ளக்காதலி காயத்ரியிடம் நாகராஜை தீர்த்து கட்ட யோசனை கூறியுள்ளார். அவர் கொடுத்த ஆலோசனையின்படி, காயத்ரி மற்றும் பானு ஆகிய இருவரும் போதையில் தூங்கி கொண்டிருந்த நாகராஜ் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மகேந்திரனை போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story