தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நீர்த்தேக்கங்களை பாதுகாக்க தவறியதுதான் காரணம் கொட்டும் மழையில் சீமான் பேச்சு


தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நீர்த்தேக்கங்களை பாதுகாக்க தவறியதுதான் காரணம் கொட்டும் மழையில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 23 July 2019 11:00 PM GMT (Updated: 23 July 2019 8:48 PM GMT)

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நீர்த்தேக்கங்களை பாதுகாக்க தவறியதுதான் காரணம் என்று வேலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

வேலூர்,

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே நேற்று இரவு நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கொட்டும் மழையில் பேசியதாவது:-

திராவிட கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி

தமிழகத்தை திராவிட கட்சியினர் அரை நூற்றாண்டு ஆண்டு விட்டார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி தான். எனவே தான் அக்கட்சிகளை எதிர்த்து தொடர்ச்சியாக தேர்தலில் போட்டியிடுகிறோம். புதிதாக கட்சி தொடங்கும்போது ஊழல், லஞ்சத்தை ஒழித்து மாற்றத்தை கொண்டு வருவதாக கூறுவார்கள்.

ஆனால் லஞ்சம், ஊழலில் திளைக்கும் கட்சிகளுடன் அவர்கள் கூட்டணி வைப்பார்கள். அவர்களால் எப்படி மாற்றத்தை கொண்டு வர முடியும். மாற்றம் என்பது சொல் அல்ல. அது ஒரு செயல். நாம் தமிழர் கட்சி மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கும். எனவே பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் பெரும்பிழையாகி விடும் என்பதால் தனியாக நிற்கிறோம். வருகிற சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சியை முன்நிறுத்தி தான் இருக்கும்.

குடிநீர் பிரச்சினை

ஆந்திர மாநிலத்தில் சட்டம் கொண்டு வந்தது போன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 80 சதவீத வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு வழங்க வேண்டும். உலக அளவில் நிலத்தடிநீர் அதிகம் உறிஞ்சப்படும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிகம் நிலத்தடிநீர் உறிஞ்சப்படும் மாநிலம் தமிழகமாகும்.

தமிழகத்தில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்கு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்காததும், தூர்வாரி பாதுகாக்க தவறியதும் தான் காரணம். இது யாருடைய தவறு?. தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் தான் காரணம். பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதி கொடுத்தது யார்?.

இடஒதுக்கீடு

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி இல்லாதபோது, எப்படி ஒரே மாதிரியாக தேர்வு நடத்த முடியும்?. நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குதான் இடஒதுக்கீடு வேண்டும். முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கூடாது.

வேலூர் தொகுதி மக்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. தமிழகத்தின் நலனை காக்க ஓட்டுக்கு பணம் வாங்காமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். சீமான் பேசிமுடிக்கும் வரை மழை பெய்துகொண்டே இருந்தது.

ஆம்பூர்

முன்னதாக அவர் ஆம்பூர் பைபாஸ் சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ஜ.க.வை காட்டியே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், நடுநிலையாளர்களின் வாக்குகளை பெற்று புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறது. 400 ஆண்டுகள் கூட ஆகாத இந்தியை திணிக்கிறார்கள். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்மொழியை அழிவில் இருந்து காக்க வேண்டுமென நாங்கள் போராடுகிறோம். தமிழ் என்று பேசினாலே பாசிசம், தேசத்துரோகி, தமிழ் தீவிரவாதம் என்று கூறுகிறார்கள்.

அப்போதே நடத்தியிருக்கலாம்

நாங்கள் ஓட்டுக்காக பேசவில்லை. நாட்டுக்காக பேசி வருகிறோம். மக்களை நம்புகிறோம். தனித்து போட்டியிடுகிறோம். மக்களை நம்பாததால்தான் மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. வேலூர் தேர்தல் தி.மு.க. வேட்பாளர் வீட்டில் பணம் பிடிபட்ட காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது அவரே வேட்பாளராக உள்ளார். இதற்கு அப்போதே தேர்தலை நடத்தி இருக்காலம். தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும் மக்கள் ஒருநாள் எங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும். அதுவரை தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story