ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2019 10:57 PM GMT (Updated: 24 July 2019 11:01 PM GMT)

சேலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

சேலம்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசுக்கு எதிராகவும், அந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் பாரதி, மாவட்ட தலைவர் ராஜேஷ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செங்கொடி, மாவட்ட துணைத்தலைவர் வெற்றிவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு கடிதங்களை எழுதி அதை அங்குள்ள தபால் பெட்டியில் போட்டனர்.

இதில் இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த நிர்வாகிகளும், பெண்களும் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தபால்களில் வாசகங்களை எழுதி புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் பாரதி நிருபர்களிடம் கூறும் போது, ‘மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தக்கோரி கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் இருந்து வருகிற 29-ந் தேதி வரை பிரதமர் மோடிக்கு 25 லட்சம் தபால் கார்டுகள் அனுப்பி வைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சம் தபால் கார்டுகள் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் இதற்கு பின்பும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.


Next Story