தேனி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் சித்த மருத்துவ பிரிவு கட்டுமான பணிகள் தீவிரம்


தேனி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடியில் சித்த மருத்துவ பிரிவு கட்டுமான பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 July 2019 10:30 PM GMT (Updated: 27 July 2019 6:43 PM GMT)

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடியில் சித்த மருத்துவ பிரிவுக்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆண்டிப்பட்டி,

தேனி க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் சித்தமருத்துவத்துக்கு என்று தனிப்பிரிவு தொடங்க அரசு முடிவு செய்தது. தொடர்ந்து அதற்காக ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு சித்த மருத்துவ பிரிவுக்கான கட்டிடம் அமைக்கும் பணியும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடைந்தால் தமிழகத்திலேயே சித்தா மற்றும் யோகா மருத்துவத்துக்கென தனிப்பிரிவு உள்ள மருத்துவமனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்ற சிறப்பை பெறும்.

3 மாடிகளுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய கட்டிடத்தில் 50 படுக்கை வசதிகளுடன் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது உள்நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து சித்த மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவுக்கு என்று தனியாக ஒரு கட்டிடம் அமைக்கும் பணிகள் தற்போது நடக்கிறது. 50 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்ததும், யோகா பிரிவு, மசாஜ்சென்டர் மற்றும் நசியம், களிக்சியம், உத்தடம், வேது உள்ளிட்ட பல்வேறு சித்த மருத்துவ முறைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதுதவிர புறநோயாளிகள் பிரிவும் இங்கு செயல்படும். சித்தா மற்றும் யோகா சிகிச்சைபிரிவை அடுத்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story