மகாதேவபுரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


மகாதேவபுரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 July 2019 10:30 PM GMT (Updated: 30 July 2019 8:29 PM GMT)

மகாதேவபுரத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

பூதலூர் ஒன்றியம் கச்சமங்கலம் மாதாகோவில் அருகில் மகாதேவபுரம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி - தோகூர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக கச்சமங்கலம், மகாதேவபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் சென்று வருகின்றனர்.

அகரப்பேட்டையில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் இந்த சாலை வழியாக தான் சைக்கிளில் சென்று வருகின்றனர். அதேபோல இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மற்ற பகுதிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் இந்த வழியாக தான் எடுத்து செல்கின்றனர்.

நடவடிக்கை

இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சேதமடைந்த மகாதேவபுரம் சாலையை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story