குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 8:15 PM GMT)

குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார். வேகத்தடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நச்சலூர்,

குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் காலனி சின்னகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அருண்கரன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தனது ஊரில் இருந்து முசிறிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது குளித்தலை அருகே பொய்யாமணியில் உள்ள கரைக்களம் பாலத்தின் மீது பெரிதாக அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடையில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அருண்கரன் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அருண்கரன் இறந்ததை கண்டித்தும், இதுபோல் தொடர்ந்து நடக்கும் விபத்துகளை உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், பாலத்தின் மீது போடப்பட்டுள்ள உயரமான வேகத்தடையை அகற்றக்கோரியும், நங்கவரம்-குளித்தலை சாலையில் மரக்கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாலத்தின் மீது உள்ள உயரமான வேகத்தடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story