சேலத்தில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை


சேலத்தில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Aug 2019 10:10 PM GMT (Updated: 12 Aug 2019 10:21 PM GMT)

சேலத்தில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம்,

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள செஞ்சிக்கோட்டை ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை சுமார் 35 வயதுடைய பெண் ஒருவரின் பிணம் கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது பெண்ணின் முகம் சிதைந்து நிலையில் இருந்ததால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் அவருடைய உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. இதனால் இந்த பெண்ணை மர்ம ஆசாமிகள் கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம்? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். அதைத்தொடர்ந்து பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story