வேதாரண்யம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து 4 ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளை


வேதாரண்யம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து 4 ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளை
x
தினத்தந்தி 15 Aug 2019 11:15 PM GMT (Updated: 15 Aug 2019 5:54 PM GMT)

வேதாரண்யம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து 4 ஐம்பொன் சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கோடிமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் செடில் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

இந்த கோவிலில் நேற்று முன்தினம் ஆடி பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகள் முடிந்து குருக்கள் கல்யாணராமன் கோவிலை பூட்டி விட்டு வீட்டிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை நாட்டாண்மைகாரரின் தம்பி ராமகிருஷ்ணன் என்பவர் கோவில் கோபுரவாசல் கதவை திறந்து மின்விளக்கை அணைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கோவில் உள்ளே இருந்து 3 கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்றுபார்த்த போது அம்மன் சிலை, சுப்பிரமணியன், வள்ளி, தெய்வானை ஆகிய 4 சிலைகளை காணவில்லை.

4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கோவிலின் பின்புற சுற்றுச்சுவரில் ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், உள்புற கதவுகளின் பூட்டுகளை உடைத்து சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

கைரேகை நிபுணர்கள் கோவிலில் இருந்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் நாகையில் இருந்து போலீஸ் மோப்பநாய் துலீப் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளை போன இந்த சிலைகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஐம்பொனால் செய்யப்பட்ட சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story