ராயக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதல்; தொழிலாளி சாவு பொதுமக்கள் சாலை மறியல்


ராயக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதல்; தொழிலாளி சாவு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:15 PM GMT (Updated: 15 Aug 2019 9:09 PM GMT)

ராயக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராயக்கோட்டை,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள குப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது45). கல் உடைக்கும் தொழிலாளி. இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து சிங்காரபேட்டைக்கு மொபட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக தண்ணீர் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு டிராக்டர் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் முத்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த பகுதியை பொதுமக்கள் டிராக்டர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்ச்சு வார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்- இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் விபத்தில் இறந்த முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story