பால் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி


பால் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 18 Aug 2019 11:15 PM GMT (Updated: 18 Aug 2019 8:17 PM GMT)

பால் விலை உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

அறந்தாங்கி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாரதீய ஜனதா கட்சி பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளது உண்மை தான். அந்த பெரும் வெற்றியை தவறான முறையில் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அரசியல் சட்டத்திற்கு விரோதமான முறையில் மத சார்பின்மை கொள்கைக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்த வரையில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள நீட், இந்தி திணிப்பு, உணவு பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு இசைவாக தலை ஆட்டுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் இடர்பாட்டில் சிக்கி பலர் இறந்து உள்ளனர். மேலும் ஒரு பகுதியில், இருந்து வேறு பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாதவாறு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளை தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக சென்று பார்த்து அந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையானதை அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும்.

தற்போது கேரளா, கர்நாடகா மாநிலத்திலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேரளாவிற்கு மட்டும் மத்திய மந்திரி அமித்ஷா சென்று பார்வையிட்டு உள்ளார். கர்நாடகா மாநிலத்தை பாரபட்சமாக பார்கின்றனர். தற்போது கேரளா, கர்நாடக மாநிலத்தில் மழை அதிக அளவில் பெய்து உள்ளதால் அங்கு உள்ள அணைகளில் தண்ணீர் வைத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் திறந்து விட்டு மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து உள்ளது. ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 28-ந் தேதி மேட்டூர் அணை மூடப்படும். அதன் பிறகு 6, 7 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும். மேட்டூர் அணை மீண்டும் திறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஏரி, கண்மாய்களில் தூர்வாரும் பணி செய்யவும், குடிமராமத்து பணிகளை செய்யவும் அரசு கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிகள் செய்யப்படாமலே பணி செய்த மாதிரி கணக்கு காட்டப்பட்டு வருகிறது.

தமிழக அரசு திடீரென பால் விலையை உயர்த்தி உள்ளது. இது நுகர்வோர்களிடமும், உற்பத்தியாளர்களிடமும் பகல் கொள்ளை அடிப்பது போல் உள்ளது. பால் விலை உயர்வை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story