மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி மாமியார் கொலை மருமகன் கைது


மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி மாமியார் கொலை மருமகன் கைது
x
தினத்தந்தி 19 Aug 2019 10:15 PM GMT (Updated: 19 Aug 2019 8:38 PM GMT)

முக்கொம்பு அருகே மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி மாமியாரை கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

ஜீயபுரம்,

திருச்சி முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் குடித்தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி(வயது 58). இவருடைய மருமகன் முருகன்(35). இரு குடும்பத்தினரும் அருகருகே வசித்து வருகின்றனர். பாக்கியலட்சுமிக்கு ரூ.85 ஆயிரத்துக்கு ஒரு செக் வந்தது. அதனை வங்கியில் மாற்ற நேற்று மதியம் தனது வங்கி கணக்கு புத்தகத்தை எடுப்பதற்காக மருமகன் முருகன் வீட்டுக்கு பாக்கியலட்சுமி வந்தார்.அந்த பணம் தொடர்பாக மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் மாமியாரை மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாக்கியலட்சுமியின் தங்கை மகன் சுதாகர்(34) சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது முருகன், மாமியார் மாடிபடிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறினார். இதில், சந்தேகம் அடைந்த சுதாகர், இதுகுறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பாக்கியலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுதாகர் கொடுத்த புகாரின்பேரில், முருகனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மாமியாரை, மாடிப்படியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story