பேச்சிப்பாறை சீரோபாயிண்ட் பகுதியில் 48 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்


பேச்சிப்பாறை சீரோபாயிண்ட் பகுதியில் 48 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 8:55 PM GMT)

பேச்சிப்பாறை சீரோபாயிண்ட் பகுதியில் 48 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வசந்தகுமார் எம்.பி. மற்றும் 5 எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அருமனை,

பேச்சிப்பாறை அணை அருகே சீரோபாயிண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 48 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் விவசாயம் மற்றும் கூலிவேலைகள் செய்தும் பிழைப்பு நடத்துகிறார்கள். மேலும், சில குடும்பத்தினர் பேச்சிப்பாறை அணை கட்டிய காலத்தில் இருந்தே இந்த பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தமிழக அரசு பேச்சிப்பாறை அணையை பலப்படுத்தும் பணிக்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாலை மறியல்

இதற்கிடையே நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி பேச்சிப்பாறை அணையின் அருகில் சீரோபாயிண்ட் பகுதியில் உள்ள 48 வீடுகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், 48 வீடுகளை சேர்ந்தவர்களுக்கு பேச்சிப்பாறை ஊராட்சி பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வசதியில்லாத இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் அங்கு குடியேற மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வசந்தகுமார் எம்.பி. தலைமையில் பேச்சிப்பாறை சீரோபாயிண்ட் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோதங்கராஜ், சுரேஷ்ராஜன், ஆஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட ஐ.என்.டி.யு.சி. தலைவர் அனந்தகிருஷ்ணன், சத்தியராஜ், சிற்றார் ரவிச்சந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயசீலன், சேகர், ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். விளவங்கோடு தாசில்தார் புரேந்திரதாஸ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், தக்கலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை குடியிருப்புகளை அகற்றவோ, வேறு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பின்னர் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சப்-கலெக்டர் சரண்யா அரி, தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ரேவதி, எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எம்.எல்.ஏ.க்கள் கூறிவிட்டு சென்றனர். 

Next Story