திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை


திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 20 Aug 2019 11:30 PM GMT (Updated: 20 Aug 2019 7:14 PM GMT)

திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் பட்டப்பகலில் ரூ.16 லட்சம் கொள்ளை போனது. இது தொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மலைக்கோட்டை,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் சிட்டி யூனியன் வங்கி கிளை உள்ளது. இந்த தனியார் வங்கி கிளையில் ‘லோகி கேஸ் ஏஜென்சி’ நிறுவனத்தினர் பணம் பெற்று துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவது உண்டு. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களான முசிறியை சேர்ந்த சரவணன் (வயது 38), திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தை சேர்ந்த அருண் (33) ஆகியோர் நேற்று காலை சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு பணம் வாங்க வந்தனர்.

வங்கியில் பணம் செலுத்தும் கவுண்ட்டரில் ரூ.16 லட்சத்தை பெற்று அதனை ஒரு பையில் வைத்தனர். மற்றொரு பையில் ரூ.18 லட்சத்தை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ரூ.16 லட்சம் வைத்திருந்த பையை திடீரென காணவில்லை. இதனால் சரவணன், அருண் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்தவர்களிடம் பணம் வைத்திருந்த பை குறித்து கேட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் உடனடியாக வெளியே வந்து பார்த்தனர். ஆனால் பையை கொள்ளையடித்துச் சென்றது யார்? என தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு சரவணன், அருண் ஆகியோர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கோபாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கருணா கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். வங்கியின் வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்தனர். ரூ.16 லட்சம் கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சரவணன், அருண் ஆகியோர் வங்கிக்கு வழக்கமாக வருவதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? அல்லது பணம் எடுத்து செல்லும் விவரத்தை வேறு நபர்களுக்கு முன்கூட்டியே 2 பேரும் தெரிவித்து அவர்களை வரவழைத்து எடுத்துச் சென்றுவிட்டு நாடகமாடுகின்றனரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கோபாலச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டபோது அதில் காட்சிகள் எதுவும் தெளிவாக இல்லை. வெளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு வருகிறோம். அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது” என்றார்.

திருச்சியில் பட்டப்பகலில் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story