கனமழையால் குறிச்சிநத்தம்-சுப்புராயபுரம் கிராமங்களுக்கு இடையே சாலை துண்டிப்பு பொதுமக்கள் அவதி


கனமழையால் குறிச்சிநத்தம்-சுப்புராயபுரம் கிராமங்களுக்கு இடையே சாலை துண்டிப்பு பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 7:57 PM GMT)

கனமழை காரணமாக குறிச்சிநத்தம்-சுப்புராயபுரம் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக வி.கைகாட்டி அருகே உள்ள குறிச்சிநத்தம் மற்றும் சுப்புராயபுரம் கிராமங்களுக்கு இடையே உள்ள சாலையின் குறுக்காக செல்லக்கூடிய கல்லாற்று ஓடையின் மேம்பாலத்தில் தண்ணீர் அதிகமாக சென்றது.

இந்த நிலையில் பாலத்தின் அருகே உள்ள சாலையில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த சாலை வழியாக மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் சென்றது. அந்த சாலையோரத்தில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்த வழியாக சென்ற போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக குறிச்சிநத்தம், சுப்புராயபுரம், பொய்யூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் போக்குவரத்து வசதியின்றி தவித்து வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

கிராம மக்கள் பாதிப்பு

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஓடையை சீரமைப்பதற்காக, அங்கு வெட்டப்பட்ட முட்செடிகள் ஓடைக்குள்ளே போடப்பட்டது. கனமழை பெய்ததால் ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு வந்தது. இந்த வெள்ளநீர் முட்செடிகளையும் அடித்துக் கொண்டு வந்ததால் பாலம் முழுமையாக அடைத்துக் கொண்டது. இதனால் பாலத்தின் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள சாலையை அரித்துக் கொண்டு சென்றது. இதனால் சாலை முழுவதும் அரிக்கப்பட்டு சாலை துண்டானது. இதனால் 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சாலையை விரைந்து சரிசெய்து தர வேண்டும் என்றனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத பழமையான கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. அந்த சுவர் பயன்பாட்டிலுள்ள புதிய கட்டிடத்தின் மீது விழுந்ததால், அந்த கட்டிடத்தில் உள்ள மின் வயர்கள் சேதம் அடைந்தன. மேலும் அருகே உள்ள குடிநீர் குழாயும் சேதமடைந்தது.

Next Story