காவிரி-அமராவதி ஆற்று உபரிநீரை, வெள்ளியணை பெரியகுளத்தில் சேமிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


காவிரி-அமராவதி ஆற்று உபரிநீரை, வெள்ளியணை பெரியகுளத்தில் சேமிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Aug 2019 11:00 PM GMT (Updated: 25 Aug 2019 5:22 PM GMT)

காவிரி-அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான குளங்களில் வெள்ளியணை பெரியகுளமும் ஒன்றாகும். நீண்ட நாட்களாக இந்த குளம் பராமரிப்பின்றி உள்ளதால், இதில் நீரை சேமித்து வைக்க முடியாத சூழல் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் குடகனாறு நீர் அமராவதி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்வதை திருப்பி, இந்த குளத்திற்கு கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை.

அதன் பேரில் 1976-ம் ஆண்டு தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் அழகாபுரி கிராமத்தில் குடகனாற்றின் குறுக்கே அணை கட்டி அங்கிருந்து வெள்ளியணை பெரியகுளம் வரை 54 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டி, அதன் வழியாக தண்ணீர் குளத்திற்கு வர வழிவகை செய்தது. ஆனால் 40 ஆண்டுகளை கடந்தும் இந்த திட்டத்தின் மூலம் குளம் நிரம்பவில்லை. இதற்கு அணை நிரம்பி உபரி நீர் மட்டுமே கிடைப்பதும், கால்வாய் அகலம் குறைவால் அதிக அளவு நீர் விரைவாக வந்து சேராததும், கால்வாய் பகுதியில் ஏற்படும் உடைப்புகள், இடையில் உள்ள விவசாயிகள் பாசனத்திற்கு நீரை எடுத்துக் கொள்வது என பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் குடி நீருக்கும், பாசனத்திற்கும் நீரின்றி பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே அமராவதி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காலங்களில் செல்லும் அதிகப்படியான நீரை வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து, குழாய்கள் மூலம் வெள்ளியணை பெரியகுளத்திற்கு கொண்டு வர அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து வெள்ளியணை பெரியகுளத்திற்கு நீர் கொண்டு வரக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நேற்று காலை அந்த குளம் அமைந்துள்ள வடக்கு மேட்டுப்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளியணை, ஜெகதாபி, காணியாளம்பட்டி, உப்பிடமங்கலம், முனையனூர், சேங்கல், முத்துரெங்கம்பட்டி, மஞ்சாநாயக்கன்பட்டி, பிச்சம்பட்டி, மாணிக்கபுரம், கீழடை, ரெங்கபாளையம், துளசிகொடும்பு, செல்லாண்டிபட்டி, குமாரபாளையம், வேலாயுதம்பாளையம், பொரணி, கருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குப்பமேட்டுப்பட்டி, மடையப்ப நாயக்கன்பட்டி, டி.கூடலூர், லந்தக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குழாய் மூலம் உபரிநீரை...

கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன், வெள்ளியணை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதிசுப்பிரமணி மற்றும் அந்தந்த பகுதி முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகள், அமராவதி மற்றும் காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கு கால உபரி நீரை வெள்ளியணை குளத்தற்கு கொண்டு வருவது குறித்தும் மேலும் சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு நீர் நிலைகளை நிரப்புவது குறித்தும் ஆலோசனை வழங்கினர். இந்த கோரிக்கை நிறைவேறும்வரை அரசின் கவனத்தை ஈர்க்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், குளத்தை முழுவதும் தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். காவிரி-அமராவதி ஆற்று உபரிநீரை குழாய் மூலம் கொண்டு வந்து குளத்தை நிரப்பி சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மானியத்துடனும், விவசாயிகள் பங்களிப்புடனும் காவிரி நீர் பாசன திட்டத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story