மறந்து போன விளையாட்டுகளை முன்னெடுத்த அரசு பள்ளி விடுமுறை நாளில் அசத்திய மாணவ-மாணவிகள்


மறந்து போன விளையாட்டுகளை முன்னெடுத்த அரசு பள்ளி விடுமுறை நாளில் அசத்திய மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 8:28 PM GMT)

மறந்து போன விளையாட்டுகளை மாணவ-மாணவிகள் மத்தியில் விளையாட செய்து விடுமுறை நாளில் அரசு பள்ளி ஒன்று அசத்தியது.

துவரங்குறிச்சி,

இன்றைய கால கட்டத்தில், கிரிக்கெட் இளைஞர்களின் இதயத்துடிப்பு போல ஆகிப்போனது. விடுமுறை நாளில் மட்டையும், பந்துமாக சுற்றி திரிகிறார்கள். பழைய விளையாட்டுகளை யாரும் நினைத்து கூட பார்ப்பதில்லை. முன்பெல்லாம் விளையாட்டு என்றால், தெருவுக்கு தெரு கபடி விளையாடப்படும். இன்றைக்கு எங்காவது ஒரு இடத்தில்தான் கபடி விளையாடப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் கபடியை கொண்டு சேர்க்கும் விதமாக புரோ கபடி நடத்தப்படுகிறது. ஆனால், தொலைக்காட்சிகளில் கிரிக்கெட்டை பார்க்கும் அளவுக்கு கபடியை அவ்வளவாக யாரும் பார்த்த மாதிரி தெரியவில்லை.

கபடிக்கே இந்த நிலை என்றால் பல்லாங்குழி, சிலம்பம், கில்லி போன்ற கிராமப்புற விளையாட்டுகளுக்கு யார் முக்கியத்துவம் கொடுக்க போகிறார்கள். இந்த விளையாட்டுகளை கிட்டத்தட்ட அனைவரும் மறந்துபோன நிலையில் அரசு பள்ளி ஒன்று தனது மாணவ-மாணவிகளுக்கு பழமையான விளையாட்டுகளை விளையாட முன்னெடுத்தது, அதுவும் விடுமுறை நாளில்.

திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘கிராமப்புற விளையாட்டை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழமையான கிராமப்புற விளையாட்டுகள் விளையாடப்பட்டன. கில்லி, பம்பரம், கோலி, டயர் வண்டி, தாயம், பல்லாங்குழி, கல்லாங்காய் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் மாணவ, மாணவிகள் இடையே நடத்தப்பட்டது.

இதேபோல் சிலம்பம் சுற்றுதல், தற்காப்பு கலை உள்ளிட்டவைகளும் நடைபெற்றது. அப்போது சிறுவர் ஒருவரும், சிறுமிகள் இருவரும் சிலம்பத்தை சுழற்றி விளையாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுமட்டுமின்றி தண்ணீர் நிரப்பிய டம்ளரை கீழே விழாமல் லாவகமாக சுற்றியது, தீப்பந்தத்தில் விளையாடியது என மாணவ-மாணவிகள் சாகசம் செய்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களும் ஆர்வமுடன் பங்கு பெற்று மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

Next Story