புதிய கல்வி கொள்கையில் உள்ள குறைகளை களைந்திடக்கோரி தஞ்சையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


புதிய கல்வி கொள்கையில் உள்ள குறைகளை களைந்திடக்கோரி தஞ்சையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2019 10:15 PM GMT (Updated: 29 Aug 2019 7:25 PM GMT)

புதிய கல்வி கொள்கையில் உள்ள குறைகளை களைந்திடக்கோரி தஞ்சையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குழந்தைசாமி, துணைத்தலைவர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் துரைப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவகுமார் ஜெயபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய கல்விக்கொள்கையில் 10 அல்லது 20 பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த பள்ளியாக செயல்படுத்தி கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்களின் கல்விக்கு கேடு விளைவிப்பதை கைவிட வேண்டும். 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு தகுதித்தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும்.

கைவிட வேண்டும்

12-ம் வகுப்பு முடித்தாலும், தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரிகளில் சேர முடியும் என்பதை முற்றிலும் கைவிட வேண்டும். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வருவதை கைவிட வேண்டும்.

மும்மொழிக்கொள்கையை கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பதை கைவிட வேண்டும். தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட குறைபாடுகளை களைந்திடகோரி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நீலகண்டன், சகிலா, மாவட்ட துணைத்தலைவர்கள் சிவலிங்கம், சந்திரசேகர், குமார், சித்திரைச்செல்வி, ஓய்வு பெற்றோர் பிரிவு மாவட்ட தலைவர் பக்கிரிசாமி, மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட பொருளாளர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

Next Story